முகவுரை
தியாகத்தில் இன்பம் காணும் நாடு, நம் நாடு; போகத்தில் இன்பம் காணும் தேசம் அல்ல. விட்டுக் கொடுத்தவன் கெட்டுப்போனதில்லை. “பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்! புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே! பூமியிற் கண்டோமே. பகைநடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே!” என்ற பாரதி தோள் கொட்டும் தேசம் நம்தேசம். அன்பின் பிடியில் அகப்படும் கருப்பொருளே ஆண்டவன், அந்த அன்பே அவனுடைய ஸ்வரூபம், அதுவே உனதும் என்பதே நம் கலாச்சாரம். நாம் அன்புடையவரா என்பதை , நமது உடல், மொழி, மனம், நாம் புரியும் செயல்கள் மூலம் காட்டிடும். அத்தகைய ஒரு செயல்பாடே பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் விருந்தோம்பல். அன்பை வளர்த்திடும் வழி விருந்தோம்பல்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
[(குறள் 43) அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]
தென்புலத்தார் முதலிய ஐம்புலத்தாருள் முன்னைய இரண்டும் கட்புலனாகாதாரை (முன்னோரும், தெய்வமும், கண்ணுக்குப் புலானாகாதவர்கள்) நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் (உறவினருக்கும், தனக்கும்) பிறர்க்கு ஈதல் அல்லாமையாலும் (அன்மையானும்), இடைநின்ற (விருந்தினர்), விருந்து ஓம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்கு முதல் ஆயிற்று
என்று விருந்தோம்பலின் முக்கியத்துவத்தை விளக்குகிறார் பரிமேலழகர்.
“அன்னத்தை நிந்திக்காதே. வந்த விருந்தினரைத் தெய்வமாகக் கருது. உனக்காக மட்டும் உணவு உண்டாக்கினால் போதாது. நாட்டுக்குப் பயன்படுமாறு உணவு ஏராளமாக உண்டாக்கு. பொருள் உண்டாக்குவது உனக்காக அல்ல. மற்றவர்களுக்காக. எவருக்கும் இடமில்லை என்று சொல்லாதிருப்பாயாக. இதுவே ஒழுக்கம். உணவு, நீர் வழங்குவதற்கு நிகரான தானம் ஏதுமில்லை”
என (தைத்ரீய உபநிஷத் ப்ருகுவல்லீ) உபநிடதங்கள் அறிவுரைத்த நாடு இந்த பாரத தேசம். விருந்தோம்பல் நம் தேசியப் பண்பு. அதன் சிறப்பதனை விருந்தோம்பல் அதிகாரத்தில், முதல் இரண்டு குறள்கள் வழியாக எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர்.
இல்லறத்தின் நோக்கமே விருந்தோம்பல்
விருந்து என்பது புதுமையைக் குறிக்கும். எனவே, விருந்தினர் என்பவர் நமக்கு அறிமுகமில்லாத மனிதர் எனக்கொள்ளலாம். விருந்தினர் என்ற சொல் “அதிதி2” என்பதாகும். அச்சொல்லிற்கு “ந வித்4யதே திதி2ஹி யஸ்ய ஸஹ அதிதி2” என்ற விளக்கம் உண்டு. அதாவது வரும் நேரம் அறிவிக்காமல் வந்தவர் விருந்தினர். அப்படி
வீட்டிற்கு விருந்தினராக வருபவர்களை, பொதுவாக இருவகையாகப் பிரிக்கலாம்:
ஏற்கனவே அறிமுகமானவர்.
அறிமுகமில்லாதவர்.
விருந்தோம்பலின் சிறப்பபினை
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 81)
என்று முதலில் கூறுகிறார். இக்குறளை இப்போது ஆய்வோம்.
“இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம்” என்று வள்ளுவனார் கூறுவது, “வனத்தில் செல்லாது, மனைவியோடு இல்லறத்தில் இருந்துகொண்டு, பொருளீட்டிப் பேணி வாழ்வதெல்லாம்” என்று பரிமேலழகர் கூறும் விளக்கம், மறைகள் கூறும் “க்ருஹஸ்தாஸ்ரமம்” என்பதைக் குறிப்பது.
மேற்கூறிய இரு வகை விருந்தினரையும் புறந்தருதல் (உபசரித்தல்) என்று “விருந்தோம்பி” என்ற சொல்லுக்கு விளக்கமளக்கிறார் பரிமேலழகர்.
வேள் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த வேளாண்மை என்னும் சொல் பொதுவாக கொடை, ஈகை ஆகியவற்றைக் குறிக்கும். வேளாண்மை என்ற சொல் "விருப்பத்துடன் பிறரைப் பேணுதல்" என்ற பொருளும் கொண்டதாகும். பிறருக்கு உதவுவது, பரோபகாரம் என்றும் பொருள். வேளாண்மை செய்தற் பொருட்டு என்பது விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு என்று பொருள்படும்.
சரி, விருந்தினர் என்பதற்கு ஏதும் தகுதி உள்ளதா என்ற ஐயத்திற்கு,
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 212)
என்கிறார் திருவள்ளுவர். தன்னுடைய முயற்சியிலும் உழைப்பிலும் ஈன்ற பொருள்கள் எல்லாம் யாருக்கு வேளாண்மை செய்வது? தக்கார்க்கு. அப்படி என்றால் அறவழி நின்ற துறந்தோர்க்கும், அறிவு வழி நிற்கும் மாணாக்கருக்கும், அயர்ந்த வயதினரான முதியோருக்கும், அன்றாடம் உணவுக்கு வழியில்லாது, உழைத்துப் பிழைக்கவும் இயலாது அல்லாடும் வறியவர்களுக்கும் கொடுப்பதே தகுதியுடையோருக்குக் கொடுப்பதாகும்.
இக் காலத்திற்போல் உண்டிச் சாலைகளும், அன்னச் சத்திரம் எனும் தங்கல் விடுதிகளுமில்லாத பண்டைக் காலத்தில், பணம் பெற்றேனும், இல்லறத்தாரையன்றி விருந்தினரைப் பேண ஒருவருமின்மையின், இல் வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் விருந்தோம்பலே என்று விருந்தோம்பலின் சிறப்பை விளக்குகிறார்.
மருந்தேயாயினும் விருந்தோடுண்க
விருந்தினர் உண்ணாமல் நாம் மட்டும் தனியே எதனையும் உண்ணக் கூடாது என்றும் அவ்வாறு உண்பது இழிவான செயல் என்றும் உரைக்கிறார் வள்ளுவர் .
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (குறள் 82)
நம்மை நோக்கி வந்த விருந்தினர் புறத்தே அதாவது வெளியே இருக்கும் பொழுது, சாவில் இருந்து காப்பாற்றக் கூடிய மருந்தே (சாவா மருந்து) ஆகினும், தனியே நாம் உண்பது, விரும்பத்தக்க செயலுக்கு உரியது இல்லை.
இக்குறளுக்கு ஒற்றிய கருத்தை ஔவையாரும், கொன்றைவேந்தன் இல் ,"மருந்தே யாயினும் விருந்தோ டுண்"என உரைக்கிறார் .
விருந்தோம்பல் என்பது, நம் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிக் கலந்தது என்பதை திருக்குறளை தவிர மட்டற்ற இலக்கியங்களிலும் காணலாம்.
உதாரணமாக,கண்ணகி கோவலனை விட்டுப் பிரிந்த நிலையில்
"அறவோர் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை (சிலம்பு)"
எனக் கூறி வருந்துகின்றாள்.இளங்கோவடிகள் 'தொல்லோர் சிறப்பின்' என்று விருந்துக்கு அடை கொடுத்துக் கூறியதால் தமிழரின் தொன்மையான பழக்க வழக்கம் என்பதும் முன்னோர் வகுத்த முறைப்படி விருந்தல் வேண்டும் என்பதும் புலனாம்.
இராமனைப் பிரிந்த சீதை விருந்தினர் வந்தால்,அவர்களை ஓம்ப இயலா நிலையை எண்ணி இராமன் என்ன துன்பம் அடைவானோ எனக் கலக்கமுறுகிறாள்,
'விருந்து கண்டபோது என்னுறுமோ என விம்மும்'
என்ற கம்பர் கூற்று விருந்திற்கான காரணம்.
முடிவுரை
விருந்தோம்பல் ஒரு வேள்வி. இதன் சிறப்பு என்னவென்றால் “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவது, பரமனை ஓம்புவதே”. இதற்கு இளையாங்குடி மாற நாயானார் புராணம் ஒன்று போதும் சாட்சியாக. முடிவுரையாக அப்புராணத்தை அறிய கீழ்காணும் இணைப்பை அழுத்துக (click).
இளையாங்குடி மாற நாயனார் புராணம்
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !