அஷ்டாவக்ர கீதை 1.17 - தன்மயமான ஆனந்தம்
அஷ்டாவக்ர முனிவர்-ஐனகர் உரையாடல். அஷ்டாவக்ரரின் அறிவுரை
முகவுரை
ஆன்மீகத்தின் மிக முக்கிய, மையக் கருத்தான ஆன்மா எனும் தன்னுணர்வு தத்துவத்தை விளக்கிட, அந்த ஆன்மாவை அனுபவிக்கக்கூடிய நிலைகளை, அடைச்சொற்களால் (adjectival nouns) விளக்குவர் நமது முன்னோர்களான ரிஷிகளும், முனிவரும். பெரும்பாலும் இந்த நுட்பம் உபநிடதங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆன்மாவை உணர்ந்து கொள்ள ஒருவர் புரியும் முயற்சியை எடுத்துரைக்கும் பேருரையாகவும் அமையலாம் இந்த சொற்கள்; அத்தனை ஆழமுடைய சொற்கள்.
அஷ்டாவக்ர முனிவர், முந்தைய ஸ்லோகங்களில் ஆத்மாவினை, சாக்ஷி, விபூ:, பூர்ண: , யேக: , முக்த , சித் , அக்ரிய: , அஸங்க: , நிஸ்ப்ருஹ: , ஷாந்த: , கூடஸ்த்தம் , போதம் , அத்வைதம், நிஹ்ஸங்க: , நிஷ்க்ரிய: , ஸ்வப்ரகாஷ: , நிரஞ்ஜன: என்ற சொற்களால் கோடிட்டுக் காட்டினார். இந்த சொற்களின் விளக்கங்களை முந்தைய பதிவில் பார்த்தோம்.
இந்த ஸ்லோகத்தில் மேலும் இத்தகைய சொற்கள் சிலவற்றை பயன்படுத்துகிறார் முனிவர்.
ஸ்லோகம்
நிரபேக்ஷோ நிர்விகாரோ நிர்ப4ர: ஷீதலாஷ்ய:
அகாதபுத்திரக்ஷுப்3தோ4 ப4வ சின்மாத்ர வாஸந: !! 1.17
தமிழாக்கம்
வரையிலா மாறா முழுமையான அமைதியுடன்
பேரறிவுகொண்டு கலக்கமேதுமிலாதவனே!
தூய இருப்புணர்வு ஒன்றையே விழைவாய்!! 1.17
விளக்கம்
நிரபேக்ஷ: ,
நிர்விகார: ,
நிர்ப4ர: ,
ஷீதலாஷ்ய: ,
அகா3த4 பு3த்3தி4: ,
அக்ஷுப்3த4: ,
சின்மாத்ர:
என்ற சொற்களைக்கூறி ஆன்மாவின் தன்மைகளை எடுத்துரைக்கிறார்.
முதலில் ஆன்மாவை வரையிலா மாறா முழுமையான, கலக்கமில்லா(குழப்பமில்லா) அமைதியான ஆழ்ந்த நுண்ணறிவு - அக்ஷுப்த: அகாத புத்தி: என்று உரைக்கிறார்.
பின்னர் மேற்கூறிய தன்மைகளை உடைய தூய இருப்புணர்வையே விரும்பு (பவசின்மாத்ர வாஸந) என்று அறிவுரை வழங்குகிறார்.
முடிவுரை
ஆசைகள் எப்படியோ எண்ணங்கள் அப்படியே; எண்ணங்கள் எப்படியோ, அப்படியே நம் அனுபவங்களும். உலகப் பொருள்களின் மீதான ஆசை சிற்றின்பச் சிந்தனையை உருவாக்கி "சம்சாரத்திற்கு" வழிவகுக்கும். எனவே பேரின்பத்தைகொடுக்கும் தூய்மையான தூய இருப்புணர்வை மட்டுமே ஆசைப்படு. அங்கணம் ஆசைப்பட்டால், நமது எண்ணங்கள் தெய்வீகமான ஆன்மாவைப் பற்றியதாக மட்டுமே இருக்கும். மேலும் பிரபஞ்சத்தையும் அதில் உள்ள வாழ்க்கையைப்பற்றிய மாபெரும் யதார்த்தத்தை அனுபவிப்பாய் என கோடிட்டு காட்டுகிறார் முனிவர்
என்று இந்த ஸ்லோகத்திற்கு விளக்கமளிக்கிறார் ஸ்வாமி சின்மயானந்தா.
“உபதேசத்தைத் திரும்பத் திரும்ப மனஸிலே புரட்டிப் புரட்டி அலசி ஆராய்ந்து தெளிகிறது ‘மனனம்’. அப்புறம் புரட்டல், அலசல், ஆராய்ச்சி என்று பலதுக்கு இடம் கொடுக்காமல், எந்த ஆத்ம தத்வத்தைப் பற்றித் தெளிவு ஏற்பட்டதோ அதிலேயே சித்தத்தை ஆடாமல் அசையாமல் வைத்துத் தன்மயமாகப் போவது ‘நிதித்யாஸனம்’.” என்று காஞ்சிப் பெரியவர் விளக்குகிறார்.
அஷ்டாவக்ர முனிவர் இந்த நிதித்ஸ்யாஸனத்தை மேற்கொள்ளுமாறு ஜனகருக்கு அறிவுரை வழங்குகிறார் இந்த ஸ்லோகத்தின் வழியாக என்று கூறுகிறார் ஸ்வாமி பரமாரத்தானந்தா தனது விளக்கவுரையில்.
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!