முன்னுரை
ஏறத்தாழ 53 வருடங்களுக்கு முன் திருச்சியில் நான் பார்த்த புகழ்பெற்ற திரைப்படம் குடியிருந்த கோயில். அந்நாளில் நான் பரம MGR ரசிகன். அப்படத்தை பலமுறை பார்த்துள்ளேன். அத்திரைப்படத்தில் கவிஞர் புலமைப்பித்தன் எழுதிய பாட்டு ஒன்று எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. அப்பாடலை இன்றும் பலமுறை கேட்கிறேன். வாருங்கள் அந்தப்பாடலைக் கேட்கலாம்.
அன்று இளமைப் பருவத்தில் நுழைந்த நான், MGR ரசிகனாக அவரின் மாறுபட்ட இருவேடங்களுக்காக அப்பாடலை ரசித்தேன். இன்று எழுபதைத் தொடும் “இளைஞனாக” அப்பாடலின் பொருளை ஆன்மீக வழியில் ரசிக்கிறேன்.
காலம், நம்மை எப்படியெல்லாம் மாற்றுகிறது? நடிகர் விவேக்கின் “எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேனே” என்ற திரை வசனம் எண்ணமாக மாறி, சட்டென்று மனத்திரையைக் கிழித்துச் சென்றது மின்னலென. “என்னது, நானாவது மாறுவதாவது, ஒருக்காலும் இல்லை; நான் நானே தான்” என ஏதோ ஒரு குரல் என்னுள் இருந்து எழுகிறது. ஒரே குழப்பம்.
உடனே என்னுள் ஒரு கேள்வி “அந்த நான்” யார்? “ “இந்த நான்” யார்? ஒரே குழப்பம். என்னுள்ளே இரு “நான்”களா? எது சரியான “நான்”?
அப்படிப்பட்ட சரியான “நான்” யார்?
இதே கேள்விதான் அப்பாடல் வரிகளின் தொடக்கம்.
சட்டென்று இக்கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன் சற்று ஆராய்வோம். முதலில் நமது சனாதன தர்ம வேதாந்த வழியில், பின் விஞ்ஞான உளவியல்வழியில்.
வேதாந்த விளக்கம்
மானிடரான நம் அனைவருக்கும் உடலும், உயிரும் உளது என்றும், உற்றதேகத்தை உயிர், உயிரை மேவிய உடல் இரண்டும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல என்றும் அனைவரும் அறிவோம்.
அப்படி உயிரை மேவிய உடலையும், அவ்வுடல் உறையும் இவ்வுலகத்தையும் முதலில் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அப்படி ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டிற்கும் பொதுவான ஐந்து அம்சங்களைக் காணலாம். அந்த ஐந்து அம்சங்கள்என்ன?
1. த்ருஷ்யத்வம் - “கண்டதே காட்சி, கொண்டதே கோலம்” - அதாவது, வெளி உலகமும் உடலும் அனுபவப் பொருள்கள். நமது உடல்-மனம்-புத்தி வளாகத்தைப் பயன்படுத்தி நாம் எதை அனுபவிக்கிறோம்/அறிகிறோமோ அதையே முக்கியமாகக் குறிக்கிறது.
2. பௌதிகத்வம் - இரண்டும் பொருளால் ஆனது. பஞ்ச-பூத-கார்யம். பௌதிகம் என்றால் ஐந்து கூறுகளின் (பூமி, நெருப்பு, நீர், காற்று மற்றும் விண்வெளி) தயாரிப்பு என்று பொருள்.
3. சகுணத்வம் - இவை இரண்டும் வெவ்வேறு குணங்கள் அல்லது வெவ்வேறு குணங்களைக் கொண்டவை.
4. சவிகாரத்வம் - இரண்டும் தொடர்ச்சியான மாற்றம், மாற்றங்களுக்கு உட்பட்டது, உலகமும் மாறிக்கொண்டேஇருக்கிறது. உடலும் மாறுகிறது. இம்மாறும் தன்மையை பின்னர் நாம் நம்மனதிற்கும் நீட்டிக்க வேண்டும். எனவே, அவை இரண்டும் சவிகாரம், மாற்றத்திற்கு உட்பட்டவை.
5. ஆகமாபாயித்வம் - ஆகம அபாயி - ஆகமம் என்றால் ஒரு குறிப்பிட்ட நிலை; அபாயி என்றால் அந்நிலை அழிந்தால் அதுவும் அழிந்துவிடும், கிடைக்காது. உடலும், உலகும் விழிப்பு நிலையில் (ஜாக்ரத்-அவஸ்தாவில்) மட்டுமே கிடைக்கும். எனது ஜாக்ரத் அவஸ்தாவில் எனது உடல் எனக்குக் கிடைக்கிறது. இந்த உலகமும் எனக்கு ஜாக்ரத்-அவஸ்தாவில் மட்டுமே கிடைக்கிறது. ஜாக்ரத்-அவஸ்தா என்றால் விழித்திருக்கும் நிலை என்று பொருள். எனது கனவு நிலையிலோ அல்லது ஆழ்உறக்க நிலையிலோ எனக்கு உலகமும் கிடைக்காது, உடலும் கிடைக்காது. மற்றவர்கள் உடலைப் பார்ப்பார்கள்; ஆனால் எனக்கு இரண்டுமே கிடைக்கவில்லை.
எனவே, உடலும் உலகமும் அனைத்து அத்தியாவசிய அம்சங்களிலும் மிகவும் ஒத்துள்ளது. இதிலிருந்து நாம் எடுக்க வேண்டிய முடிவு என்ன?
உடலும் உலகமும் உணர்ச்சியற்ற நிலையற்ற ஜடப் பொருட்களே; இந்த சுவர், இந்த தளம், இந்த மின்விசிறி, இவை அனைத்தும் உணர்ச்சியற்ற நிலையிலா ஜடப்பொருட்களே. வருவார் - இருப்பார் - போவார். உடல் எனவே, இயல்பாகவே உணர்ச்சியற்றதாக இருக்க வேண்டும் அல்லவா!
பின்னர் அதையே மனதிற்கும் நீட்டிக்க வேண்டும். மனமும் அனுபவத்தின்பொருளே. எப்படியென்று பாரக்கலாம்.
வேத சாஸ்திரத்தின்படி, மனமும் பஞ்ச பூதங்களால் ஆனது. ஒரே வித்தியாசம். பரு உடல் ஐம்பொறிகள் (மெய், வாய், கண், மூக்கு, செவி) வழி பஞ்சபூதங்களுடன் (உலகுடன்) தொடர்பு கொள்ளும். மனம், நுன்னுடல் ஐம்புலன்கள் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்) வழி பஞ்ச பூதங்களுடன்(உலகுடன்) தொடர்பு கொள்ளும். மனமும் சகுணத்வம் பெற்றுள்ளது, குணங்களுடையது. மற்றும் மனத்திற்கும் மாற்றம் உண்டு. அதற்கு சவிகாரத்வம்உண்டு. மேலும் ஐந்தாவது ஆகமாபாயித்வம் விழிப்பு, கனவு நிலைகள் (ஜாக்ரத் மற்றும் ஸ்வப்னா) ஆகியவற்றில் மனம் கிடைக்கிறது, ஆனால் ஆழ்ந்த உறக்க நிலையில் (ஸுஸுப்தியில்) மனம் கிடைக்காது. எனவே, அதுவும்ஆகமாபாயித்வத்திற்கு உட்பட்டது.
எனவே, நாம் அடையும் முடிவு, உலகம் போல உடலும் மனமும் இயல்பிலேயே உணர்ச்சியற்றவை - ஜடப்பொருள்கள தான்.
படிப்படியாக மேலும் ஆய்வோம்.
முதலில் உடலும் மனமும் இயல்பாகவே உணர்ச்சியற்றதாக இருந்தாலும், இரண்டுமே உணர்வு பூர்வமானவை என்பது நமது நேரடி அனுபவம். அல்லவா? இது எப்படி சாத்தியம்?
இரண்டாவது - எனவே, அவர்கள் உணர்ச்சியைக் கடன் வாங்கியிருக்கவேண்டும். இது அடுத்த படி - இரண்டும் இயல்பாகவே உள்ளார்ந்த உணர்ச்சியற்றவை; எனவே, அவைகளின் உணர்வுகள் கடன் வாங்கப்பட்டிருக்கவேண்டும். உதாரணமாக, சந்திரனுக்கு அதன் சொந்த ஒளி இல்லை, ஏனெனில் அது ஒரு கிரகம் கூட இல்லை. இது ஒரு செயற்கைக்கோள் மட்டுமே. அதற்கு சொந்தஒளி இல்லை. ஆனால் ஒரு முழு நிலவு இரவில், நான் ஒரு பிரகாசமான நிலவை அனுபவிக்கிறேன். பிரகாசம் என்பது சந்திரனுக்கு உள்ளார்ந்ததல்ல. அதுபிரகாசமாகத் தோன்றினால், பிரகாசத்தை வேறு ஏதேனும் மூலமான சூரியனிடமிருந்து கடன் வாங்கியிருக்க வேண்டும். அதேபோல, உடல்-மன-உணர்வுசிக்கலானது சந்திரனைப் போன்றது. இது கடன் வாங்கப்பட்ட உணர்வைப்பெற்றுள்ளது. இது அடுத்த பாடம்.
மூன்றாவது - மேலும் அடுத்தது என்ன? கடன் வாங்கிய உணர்ச்சி இருந்தால், கடன் கொடுக்க யாராவது இருக்க வேண்டும்.
உணர்ச்சியற்ற உடல்-மனவளாகத்திற்கு உணர்ச்சியைக் கொடுக்கும் அந்தக் கொள்கைதான் ஆத்மா என்று வேதாந்தத்தில் அழைக்கப்படுகிறது.
உடல் மன வளாகம் கடன் வாங்கிய உணர்ச்சியைப் பெற்றிருந்தால், ஆத்மா அதைக் கொடுக்கிறது என்றால், ஆத்மாவின் இயல்பு உடல் மன வளாகத்தின் தன்மைக்கு நேர்மாறாக இருக்க வேண்டும். ஏன்? ஏனெனில் த்ருஷ்யத்வம், சகுணத்வம், சவிகாரத்வம் போன்ற ஐந்து அம்சங்களும் ஆத்மாவிற்கும்இருந்தால், ஆத்மாவும் ஜடமாகிவிடும். ஆத்மாவும் ஜடம் என்றால், அதற்கு வேறு ஏதாவது தேவைப்படும். ஆத்மா ஜடமாக இருக்க முடியாது என்பதால், அது மற்ற ஐந்து அம்சங்களுக்கு மாறாக ஐந்து அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது:
1. அத்ருஷ்யத்வம் - அது ஒருபோதும் அனுபவப் பொருளல்ல. அது எப்போதும் அனுபவிப்பதே, அனுபவிக்கப்பட்டது அல்ல. இது அத்ருஷ்ய அல்லது த்ருக்-ஸ்வரூபம்.
2. அபௌதிகத்வம் - இது ஒரு பொருள் அல்ல. அதனால்தான், பௌதிகஅறிவியலால் ஆத்மாவைப் படிக்க முடியாது. அந்த அறிவியலால் பொருள் மற்றும் பொருட்களை மட்டுமே படிக்க முடியும். ஆத்மா என்பது பொருள்அல்லாதது. அது கிடைக்காது. இது அபௌதிகத்வம். பொருள் அல்லாத ஆன்மீக தத்துவம்.
3. அகுணத்வம் அல்லது நிர்குணத்வம் - ஆத்மாவிற்கு பொருள் மற்றும் பொருளுக்கு இயற்கையான எந்த பண்புகளும் குணங்களும் இல்லை. அது நிர்குணம்.
4. அவிகாரத்வம் - ஆத்மா எந்த வித மாற்றத்திற்கும் உட்பட்டது அல்ல. உடல், மனம் உட்பட வெளி உலகில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுக்கும் இது மாறாத சாட்சியாகும்.
5. அநாகமாபாயித்வம் - வருகைக்கும் புறப்பாட்டுக்கும் உட்பட்டது அல்ல.
எனவே அத்ருஷ்யத்வம், அபௌதிகத்வம், நிர்குணத்வம், அவிகாரத்வம், அநாகமாபாயித்வம் ஆத்மாவின் இயல்பு.
ஆத்மாவின் இருப்பை ஒருபோதும் சந்தேகிக்க முடியாது, ஏனென்றால் நமது ஒவ்வொரு அனுபவமும், அனுபவப் பொருளாக இல்லாத அனுபவசாலியின் இருப்பை நிரூபிக்கிறது. படத்தில் இல்லாத கேமராவுக்கு ஒவ்வொரு படமும் சான்றாக இருப்பது போல், புறநிலை உலகில் இல்லாத அனுபவசாலிக்கு ஒவ்வொரு அனுபவமும் சான்றாகும்.
இதுவே வேதாந்த ரீதியிலான ஆத்ம விளக்கம்.
இப்பொழுது உளவியல் ரீதியாக (psychological perspective) சற்று சிந்திப்போம்.
உளவியல் விளக்கம்
நாம் எதிர்கொள்வது எதுவும் நம்மின் ஒரு பகுதியாகக்கூட இருந்தாலும், நாம்அது இல்லை; நாம் அதைவிட வேறு என உணர்கிறோம் அல்லவா? ஆக, நாம் எதிர்கொள்ளும் அனைத்தும் நமது அனுபவங்களேயன்றி நாம் அல்ல என்று உணர்கிறோம். அதாவது நம்மையும் நாம் எதிர்கொள்ளும் பொருட்களையும் இணைப்பது நம் அனுபவம் என்று அறிவோம். இந்த உலகமும் அப்படித்தான். அது நம் அனுபவமே.
சரி, இப்பொழுது நம் பார்வையை உள்நோக்கி திருப்புவோம். நம்மில் பெரும்பாலோர், நம் உடலும் பொருளே ஆகையால் நான் உடல் அல்ல என்றுகூறுவோம். கனவுலகில் “நான்” நானாகத்தான் இருக்கிறேன்; உடல் எங்கோ உள்ளது. எனவே என் உடல் எனும் பாத்திரத்திற்குள் உறைந்திருப்பது போலிருக்கும் உணர்வே “நான்” எனும் எனக்கு உடலைவிட நெருக்கமெனத் தோன்றுகிறது, அல்லவா?
அப்படியென்றால் நானெனும் அபிமானம் (அஹங்காரம், Ego) அதாவது “தன்முனைப்பு” -அது என்ன? தலையுள் என்னைப்பற்றி வைத்திருக்கும் நிழற்படமா? இருக்காது போல. ஏனெனில், இருந்தால் அப்படம் ஒரு கலவைப்படம்; என்னை நான் கண்ணாடி முன்பார்த்த படங்களின் தொகுதி, என் நினைவுகளின், உணர்வுகளின் ஒருதெளிவிலா கலவை அப்படம். எனவே என் அகங்காரம் என்பது என்னை ஒருபொருளாய் (object) உணர நான் செய்யும் ஒரு வீண் முயற்சி.
உண்மையில் “நான்” ஒரு பொருளல்ல. நான் உணர்கிறேன், சிந்திக்கிறேன், விரும்புகிறேன், செயல்படுகிறேன் என்றெல்லாம் என்னை உடல் சார்ந்த ஒரு படத்தொடர்பாக நான் உணரலாம்; அத்தகைய உணர்வு, ஒரு வசதியான கற்பனை, ஆனால் அது என்னுடைய முழு நிழற்படம் அல்ல. அவை “நான்” அல்ல.
மேலை நாட்டு உளவியல் அறிஞர்கள், குழந்தையின் வளர் பருவத்தில் இதை உடல் சார்ந்த “கண்ணாடி நிலை”என்கிறார்கள். ஏனென்றால் ஒருகண்ணாடியின் முன் நாம், இருப்பதைப்போல எண்ணி சிந்திப்பது - கண்ணாடி ஒருபொருளாக அங்கு இல்லாவிட்டாலும், மிக முக்கியமாக, மற்றவர்களின் பார்வையெனும் கண்ணாடியில் குழந்தையின் உடலின் பிரதிபலிப்பு. அங்கிருந்துதான், தன்முனைப்பு (ego) தொடக்கம். பிறர் நம்மைப் பார்க்கும் பார்வையை சார்ந்து அக்குழந்தை அதனைப் பார்க்க ஆரம்பிக்கின்றது. (அதற்குத்தானோ என்னவோ நம் முன்னோர்கள், சிறு குழந்தைகள் கண்ணாடியைப் பார்க்க கூடாதென்று கூறினரோ என்னவோ)
அதாவது என்னை, “என் உடலுள் வசிக்கும் நான்” என்று உணர ஆரம்பிக்கின்ற கட்டமே தன்முனைப்பின் உருவாக்க கட்டம்.
சரி, என்னுடல், என் தன்முனைப்பு இவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். என்னுள்ளே இன்னும் சிக்கலான என் நினைவுகள், உணர்வுகள், கனவுகள் எல்லாம் தோன்றுகின்றனவே ! என் கட்டுக்குள் அடங்கா, என்னுள் இருக்கும் ஏதோ ஒரு இடத்திலிருந்து அவைகள் தோன்றுகிறதே. அந்த இடத்தைத் தோண்டத் தோண்ட நினைவுகள், உணர்வுகளின் கருவூலங்கள் கிடைக்கின்றனே தவிர அந்த இடம் கிடைக்கவில்லையே. இதில், ஒரு விஷயத்தை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். தோண்டுபவன், தன்முனைப்பு, நினைவுகள், உணர்வுகள், கனவுகள் இவையனைத்துமே “நான்” தான்.
ஆக, உடலில், தோண்டியும் கிடைக்காத அந்த இடமாகவும் அதைக் கடந்தும், தன்முனைப்பாகவும் அதைக் கடந்தும், நினைவுகளாகவும் அதைக் கடந்தும், உணர்வுகளாகவும் அதைக் கடந்தும், உடலின் வெளியே உள்ள பொருட்களின்அனுபவமாகவும், உணர்வுகளாகவும் அவைகளக் கடந்தும் இருக்கும் நானே அந்த “நான்”.
அந்த “நான்” தான் ஆத்மா. இதனையே SELF என்று ஆங்கிலத்தில்கூறுகின்றனர்.
முடிவுரை
என்ன, என் கேள்விக்கு என்ன பதில்? விடை கிடைத்ததா? “நான் யார் தெரியுமா? எடுத்துச் சொன்னால் புரியுமா?” என்று “அன்பே வா” படத்தில் MGR பாட்டுக்குப் போகாதீர்கள். அது பொருள் உலக நான்.
“அது சரி. நான் யார் என்று அறிந்து என்ன பலன்? “ இப்படி ஒரு கேள்வி எழலாம் நம் அனைவருக்கும்.
இதற்கு பதில் தாயுமானவர் அளிக்கிறார்.
தன்னையறிந்தால் தலைவன்மேற் பற்றல்லது
பின்னையொரு பற்றுமுண்டோ பேசாய் பராபரமே!
ஓ ? அப்படியா! சரி, யார் அந்தத் தலைவன்? அடுத்த கேள்வி நமக்கு.
அந்த தலைவனை அறிய, அடுத்த பதிவுக்கு பொருத்திருக்கவும்.
அதுவரை, மீண்டும் உங்களை நான் “நானாக” சந்திக்கும் வரை…………
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !